Thursday 18 September 2014

கசப்பின் அலை

கசப்பு அடுக்குகளின் மீது
தேன்திரவங்களைப் பூசுவதுதான்
எத்தனை அபத்தம்?
மூச்சு முட்டிய
முதற்கசப்பு விடுத்த
இறுதி சுவாசம்
மேற்பரப்பில் குமிழிட்டு வெடித்ததும்
சுயம் நினைவு வந்ததுபோல்
ஒவ்வொரு கசப்பாய்
மேலெழும்புகின்றன
உடைந்த கலத்திலிருந்து
கசிந்த
கழிவெண்ணெய் போல்
அவை எங்கும் மிதக்கின்றன
காற்றிலும் கசந்த வாசம்
உணவு தேடி எங்கிருந்தோ வந்த
பறவையின் சிறகுகளிலும்
பாரமேற்றி
வண்ணத்தை மாற்றுகின்றன
கசப்புகள்
அடர்த்தி கூடியதும்
கசப்புகளால் ஆன
புது அலையொன்று எழுகிறது
கசப்புகளை அள்ளியள்ளி
அது கரையில் கொட்டுகிறது
வளைகளுக்குள் இருந்து
எட்டிப் பார்க்கும் முயல்குட்டிகளைப் போல்
மிக நிதானமாய்
வெளி வருகின்றன
தேன் திரவங்கள்
மீண்டும் நினைவு
வந்ததுபோல்
நிதானித்துப் பயணிக்கிறது
தனியே ஒரு அலை

No comments:

Post a Comment