Monday 12 May 2014

மஞ்சள் கீதங்கள்

கனவுகளென்றால்
அச்சம் கொள்பவளை 
அறிவீரா

புத்தக அலமாரியிடுக்கில்
இரவுகளைப் புதைப்பவளை
கனவுகள் விரட்டிவருவதாய்
உறுதியாய் நம்புபவள்

புனைவுக் கதைகளுக்குத்
தன்னை ஒப்புக்கொடுத்திருந்த
நல்லிரவொன்றில்
தன்னிச்சையாய் சிக்கிக்கொண்டனள்
வழமைக்கனவில்

வெளிறிய முகத்தோடு
பூங்காமூலையிலிருந்து
அந்த மஞ்சளுடைச் சிறுமியை
வெகுநேரம் அழைத்தபடியிருந்தாள்

வழமைபோல் ஏனையோர்
அவளைப் பைத்தியமாய்
சித்தரித்துச் சிரித்தனர்
அவர்தம் விழிகளுக்கு
புலப்படாதிருந்தச் சிறுமியை
தொடர்ந்து விளித்தனள்

அருகில் வந்தச் சிறுமி
வழமை புன்னகையுதிர்த்து
பெருமரம் பின் மறைந்தனள்

வெள்ளி முளைக்கத்துவங்கிய
நேரம் கண்ணீருடன்
அலறி எழுந்தவள்
நினைவிலிருந்து நழுவிய
ஏதோவொன்றை
இழுத்து அணைத்துக்கொள்கிறாள்

அது சன்னமாய் ஒலிக்கத்
துவங்குகிறது
இறுதிநாளில்
மஞ்சளுடை அணிந்திருந்த
அவள் மகவின்
கீதங்களை

No comments:

Post a Comment