Monday 12 May 2014

சுழித்து ஓடுகிறது பூங்காற்று

யுகங்களாய்
சூரியக்கணைகளால்
துளைக்கப்படாதச்
சுனையில் இறங்குகிறாள்
சிறுமி
அவசரச்செய்தி சொல்பவன்
போல் மலையெங்கும்
சுழித்து ஓடுகிறது
பூங்காற்று

-------------------------------

குகைகளுக்குள்
சித்தர்களை அவள்
எதிர்பார்ப்பதில்லை
செண்பக மலர்கள்
தூவிக்கிடக்கும்
படிகளின் மீது
சற்றே அழுந்தப் பாதம்
பதித்து நடக்கிறாள்

--------------------------------

வள்ளி மஞ்சளரைத்தக்
கல்லுடன்
அந்தக் குளம்
அங்கேயே கிடந்தது மலைமேல்
பாறை மறைவிலிருந்து
விடுபட்ட அவர்களைக்
கண்டு கல்லுக்கடியில்
நாணிப் பதுங்குகிறது
பழைய தேரை

--------------------------------

அனல் தகிக்கும்
வள்ளிமலை படிகளில்
ஈரச்சேலையுடன்
ஏறிச் செல்பவளை
வெயில் வழியும் விழிகளுடன்
உற்று நோக்குகிறது
மரத்துக் குரங்கும்

-----------------------------------

No comments:

Post a Comment